பிழை பொறுப்பாய் ரஹ்மானே!
பிழை பொறுப்பாய் ரஹ்மானே!
இறை தந்தான் மாதங்கள்
எல்லாமே நல்லவைதான்!
குறையில்லை என்றாலும்
குறிப்புடனே ரமழானை
நிறைவுடனே தனதென்றான்
நிகரில்லா நன்மை சேர்
மறை தந்தான் இந்நாளில்
மகத்துவமோ மிகப்பெரிதே!
எத்தனையோ இராப்பகல்கள்
இயங்கிவரும் பூவுலகில்
அத்தனையும் அல்லாஹ்வின்
அருட்கொடையே என்றாலும்
சித்தமதை நோன்பாலே
சீர்படுத்தும் ரமழான்தான்
அத்தனைக்கும் மகுடமென்றே
ஆக்கிவைத்தான் அருளாளன்!
தெரியாமல் திசைமாறிச்
சென்றநிலை நீ பொறுப்பாய்!
புரியாமல் நிலையிழந்து
போனதெல்லாம் நீ பொறுப்பாய்!
அரிதாகும் ரமழானில்
அனைத்துப்பிழை நீ பொறுப்பாய்!
அறியாமல் தவறிழைத்தோம்
அல்லாஹ்வே! நீ பொறுப்பாய்!
திருவை அப்துர்ரஹ்மான்
ரஹ்மத் மாத இதழ், ஜன-1998

கருத்துகள்
கருத்துரையிடுக